இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத ஒன்று யுபிஐ. பெரிய வணிகவளாகங்கள் முதல் சிறிய தள்ளுவண்டி கடைகள் வரை யுபிஐ செயலிகள் மூலம் பண பரிவர்த்தனை செய்யப்பட்டுவருகிறது.
இந்தியாவில் 2016ஆம் ஆண்டு அறிமுகமான யுபிஐ பரிவர்த்தனை முறை, தற்போது 2022 செப்டம்பர் மாதத்தில் மட்டும் ரூ.11 லட்சம் கோடி பரிவர்த்தனைகள் யுபிஐ மூலம் நடந்துள்ளதாக நேஷனல் பேமெண்ட்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (என்பிசிஐ) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
யுபிஐ என்றால் என்ன?
வங்கி பரிவர்த்தனைகளை எளிதாகச் செய்வதற்கு வசதியாகப் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. அத்தகைய தொழில்நுட்ப வளர்ச்சியில் ஒன்றுதான் யுபிஐ.
ஒருங்கிணைந்த பணப் பரிவர்த்தனை அமைப்புதான் யுபிஐ (Unified Payment Interface) என்று அழைக்கப்படுகிறது. இது இந்திய தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் அபிவிருத்தி செய்யப்பட்ட ஒரு கட்டண முறையாகும். யுபிஐ, இரண்டு வங்கிக் கணக்குகளுக்கு இடையேயான பரிவர்த்தனைகளை எளிதாக்குகிறது.
கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்ற பல்வேறு செயலிகள் மூலம் க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண் உள்ளிட்டோ பண பரிவர்த்தனைகள் செய்யப்படுகிறது. யுபிஐ பரிவர்த்தனைக்கு இதுவரை எந்தக் கட்டணமும் வசூலிக்கப்படுவதில்லை.
பரிவர்த்தனையில் உள்ள சிக்கலும், தீர்வும்
க்யூஆர் கோடுகளை ஸ்கேன் செய்தோ அல்லது மொபைல் எண் உள்ளிட்டோ பணம் அனுப்பும்போது சில நேரங்களில் தவறுகள் நடந்துவிடும். ஒரு கணக்கிற்கு பதிலாக வேறு ஒரு கணக்கிற்கு பணம் அனுப்பிவிடுவோம். அதை எப்படி திரும்ப வாங்குவது என்று போராடுவோம்.
கூகுள் பே, போன் பே, பேடிஎம் என்று எந்த யுபிஐ செயலிகளில் நீங்கள் தவறாக பணம் செலுத்தியிருந்தாலும், உடனே அதன் வாடிக்கையாளர் சேவைக்குச் சென்று புகார் செய்ய வேண்டும். அதே நேரத்தில், உங்கள் வங்கியின் உதவி எண்ணை அழைத்து புகாரைப் பதிவு செய்யலாம்.
அதோடு, இந்திய தேசிய கொடுப்பனவு கழகத்தின் (NPCI) இணையதள பக்கத்திற்கு சென்று ( www.npci.org.in ) அதில் மேலே உள்ள தரவுகளில் What we do (நாங்கள் என்ன செய்ய வேண்டும்) என்ற தெரிவை தொட்டால் அதில் அனைத்து யுபிஐ பெயர்களும் வரிசையாக பட்டியலிடப் பட்டிருக்கும்.
அதில் நீங்கள் பயன்படுத்திய கணக்கை தெரிவு செய்தால் அதில் Dispute Redressal Mechanism (பிரச்சனைக்கு தீர்வுகாணும் முறை) க்கு செல்ல வேண்டும்.
இங்கே பரிவர்த்தனை தாவல் என்று காண்பீர்கள் அதில் பரிவர்த்தனை தன்மை, பிரச்சனை, ட்ரான்ஸாக்ஷன் ஐடி, வங்கி பெயர், தொகை, பரிவர்த்தனை தேதி, இமெயில் ஐடி மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்களை சரியாக நிரப்ப வேண்டும். இதை நிரப்பியபின் பிரச்சனை பதிவு செய்யப்பட்டு விரைவாக தீர்க்கப்படும். தவறாக அனுப்பிய பணமும் திரும்ப கணக்கிற்கு வந்து சேரும்.
ஆர்பிஐ (RBI) வழிகாட்டுதல்:
ரிசர்வ் வங்கி வழிகாட்டுதல்களின்படி, நீங்கள் தவறுதலாக வேறொரு வங்கி கணக்கிற்கு பணம் அனுப்பியிருந்தால், bankingombudsman.rbi.org.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று புகார் செய்யலாம். இதன் மூலம் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.